Sunday, April 19, 2015

CIRCLE UNION CIRCULAR COPY AS DEMANDED BY CADRES

                      

                                       NFPE
      அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்குரூப்  ‘சி,
     தமிழ் மாநிலம் , தேனாம்பேட்டை, சென்னை 600 018.

சுற்றறிக்கை  எண் : 13                                                                                                               நாள் 09.04.2015

பெறுநர்: மாநிலச்சங்க நிர்வாகிகள் / கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநில மகிளா கமிட்டி உறுப்பினர்கள்.


26.03.2015 தமிழகம் தழுவிய  வேலை நிறுத்தம்  மாபெரும் வெற்றி !

அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்  அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும்  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பிலும், தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும்   முதலில் நெஞ்சார்ந்த  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ! 

அடக்கு முறைக்கு எதிராகஅதிகார அத்து மீறல்களுக்கு எதிராகதொழிற் சங்க உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தொழிற்சங்க  பழி வாங்கும்  நடவடிக்கைகளுக்கு எதிராக அடிப்படை பணியிட வசதிகள் மறுக்கப்படுவதற்கு எதிராக,  CBS /CIS குளறுபடிகளுக்கு  எதிராக,  நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும்  ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திட  தமிழகம் தழுவிய அளவில் NFPE  பேரியக்கத்தின் அனைத்து 9 உறுப்பு சங்கங்களும்  ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திட கொடுத்த அறைகூவல் மாபெரும் வெற்றி பெற்றது !

இது  தமிழக  அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு சிறப்புப் பதிவு. ! இப்படி  தமிழக பிரச்சினைகளுக்காக NFPEஇன் உறுப்பு சங்கங்கள் அனைத்தும் இணைந்து  ஒரு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத  ஒரு சிறப்பு ! கடந்த 30ஆண்டுகளில் இல்லாத ஒரு  தொழிற்சங்க வரலாற்றுப்  பதிவு ! இந்த ஒற்றுமை என்ன விலை தந்தேனும்  கட்டிக் காக்கப்படவேண்டும் !  

அரசு மற்றும் நிர்வாக இயந்திரங்களின்  சட்ட விரோத தொழிலாளர் விரோத  அதிகார  அத்து மீறல்களுக்கு எதிராக  நிச்சயம்  நாம் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டிய  சூழல்  இன்று பெருகி வருகிறது. தொழிலாளர் நல  ஆணையம் முன்பாகக் கூட பேச்சு வார்த்தைக்கு வர மறுக்கும் மாநில  நிர்வாகம் ஒரு புறம்அரசு ஊழியர்களை  கொத்தடிமைகள் போல நினைத்து  சட்டங்களை குப்பையில் தூக்கி எறிந்து காட்டு தர்பார் நடத்தும்  திண்டுக்கல்  கோட்ட அதிகாரி போன்ற  பல குட்டி அதிகாரிகள் மறுபுறம். இந்த நிலை மாநில  நிர்வாகத்தால்  மாற்றப்பட வேண்டும் . அல்லது தொடர் போராட்டங்கள் மூலம் நாம் மாற்றியாக வேண்டும் . தொழில் அமைதி காக்கப்படவேண்டும். அரசு ஊழியர் அடிமையல்ல என்பது  உணர்த்தப்படவேண்டும் . அரசாங்க இயந்திரம்  ஒரு  MODEL  EMPLOYER  என்ற அரசியல் அமைப்புச் சட்ட விதி  நம்மை ஆளும் நிர்வாகத்திற்கு  புரிய வைக்கப்பட வேண்டும் . 

நம்முடைய  ஒற்றுமையின் சக்திநம்முடைய போராட்டத்தின் சக்திநம்முடைய வேலை நிறுத்தத்தின் சக்திநிச்சயம் நிர்வாகத்திற்கு ஊழியர்களின் கொதி நிலையை புரிய வைத்திருக்க வேண்டும். ஊழியர்களிடையே நிலவும் அமைதி இன்மையை  தெரிய வைத்திருக்க வேண்டும் ! ஊழியர்கள் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். எதிலும் பரிசீலனை இல்லாமல்  கண்மூடித்தனமான உத்திரவிடும்  போக்குகள்  மாற்றப்படவேண்டும் ! இது நடக்குமா ?  நிச்சயம் நடக்கும்  என்பது கடந்த கால தொழிற்சங்க வரலாறு !  கடந்த கால போராட்டங்களின் வரலாறு !  மாறுவது என்பது  விதி !  மாறும் என்பது  ஜனநாயகத்தில் பால் நம்பிக்கை உள்ளோருக்கு உள்ள உறுதி !

நம் எதிர்ப்பு, இந்தியா முழுமைக்கும் தெரியும் வண்ணம்   மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கொன்றும் அங்கொன்றுமாக இடப்படும் உத்திரவுகள் மட்டுமே முழுப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது..  அனைத்து கோரிக்கைகளின் மீதும் முழுமையான பேச்சு வார்த்தைக்கு  நிர்வாகத்தைநிர்பந்திப்போம் !  சட்ட பூர்வமாகவும்  பிரச்சினையை அணுகிடுவோம் !  அப்போதும் பிரச்சினைகள் தீரவில்லையெனில்  அடுத்த கட்ட போராட்டத்திற்கு  தயாராவோம் ! இது மனமிருந்து  நிர்வாகத்தால்முடிக்கப்படுமானால் முடிவு ! முடிவல்ல என்றால்  அடுத்த கட்டத்தின்  ஆரம்பம் ! ஆம் ! -பிரச்சினைகளின் தீர்வே  நமது  குறிக்கோள் ! பிரச்சினைகளின் தீர்வுக்கு போராட்டம் தான்  வழி என்று நாம் நிர்ப்பந்திக்கப்பட்டால் வேறு வழி நமக்கு இல்லை ! போராட்டமே  நமது ஆயுதம் ! அடுத்த கட்டம் நோக்கி  நாம் சிந்திப்போம் ! 

மதுரை மண்டலத்தில் மாநிலச் செயலர்

மதுரை மண்டல அலுவலகத்தில் DEPUTATION  இல் வைத்திருக்கும்  மதுரை கோட்டத்தை சேர்ந்த 28ஊழியர்களை உடனே திருப்பி அனுப்பக் கோரி  அரசரடி தலைமை அஞ்சலகத்தில்  பணியில் இருந்து கொண்டே தொடர் உண்ணாவிரதம் இருந்த   மதுரை  அஞ்சல் மூன்று கோட்டச் செயலரின் போராட்டத்திற்கு ஆதரவாகவும்,  அவர்களது கோட்டப் பிரச்சினைய தீர்த்திடவேண்டியும்  PMG SRஅவர்களுடன் நேரடி பேச்சு  வார்த்தை நடத்திட வேண்டியும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J.இராமமூர்த்தி அவர்கள்   கடந்த 19.03.2015   மதுரைக்கு சென்றிருந்தார்.  காலையில் தோழர். சுந்தரமூர்த்தி அவர்களை நேரில் சென்று வாழ்த்திவிட்டு,  அவர் முன்னிலையிலேயே APMG STAFF அவர்களை  கைபேசியில் தொடர்பு கொண்டு  இந்தப் பிரச்சினை குறித்து PMG SR அவர்களுடன்  விவாதித்திட  மண்டல அலுவலகம்  வருவதாகவும்  உடன் நேரம் ஒதுக்கித் தருமாரும் வேண்டினார்.  

முதலில்  PMG SR  அவர்கள் வெளியில் இருப்பதாக தகவல்  தரப்பட்டது.  அவர் வந்தவுடன் உடன் தகவல் தெரிவிக்குமாறு மாநிலச் செயலர்  வேண்டினார் . 15 நிமிடம் கழித்து  PMG அவர்கள்  வீட்டில் இருப்பதாகவும்  அவருக்கு சற்று உடல் நலம்  சரியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு எப்படியும் அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்று  வலியுறுத்தினார்  நம் மாநிலச் செயலர். மீண்டும் அரை மணி நேரம்  கழித்து , PMG அவர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர் விடுப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி  மாநிலச் செயலர்  மற்றும் அவருடன் அங்கு வந்திருந்த  அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர்A . வீரமணி ,GDS  மாநிலச் செயலர் தோழர். தனராஜ் முன்னாள் மாநிலச் செயலர்  தோழர். பார்த்திபன்,விருதுநகர்  கோட்ட முன்னாள் செயலர் தோழர் L.S. பாண்டி கோட்ட செயலர் தோழர். சத்தியமூர்த்தி ஆகியோருடன்   மண்டல அலுவலகம் சென்று  APMG STAFF  அவர்களிடம் PMG உடனான சந்திப்புக்கு   உடன்   ஏற்பாடு செய்திட வேண்டினார். அவர் தன்னால் தொடர்பு கொள்ள இயலாது என்று தெரிவித்ததால்மீண்டும்  கைபேசியில்  PMG SR அவர்களை தொடர்பு கொண்டு  பேசினார் நம் மாநிலச் செயலர். வேறு வழியின்றி நம் மாநிலச் செயலாளர் தோழர். J .R . இடம்   PMG SR அவர்கள்  மாலை  05.30 மணிக்கு   நேர் காணலுக்கு ஒப்புக் கொண்டார்.

அதனடிப்படையில் மாலை 05.30 மணியளவில்  PMG அவர்களுடன்  மாநிலச் செயலரின் சந்திப்பு நடைபெற்றது. மாநிலச்  செயலருடன்மாநில நிதிச் செயலர் தோழர். A  வீரமணிமுன்னாள் மாநிலச் செயலர் தோழர்.  பார்த்திபன்  விருதுநகர் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். L S.  ஆகியோர் கலந்துகொண்டனர்.  பேச்சு வார்த்தை 1 1/2 மணி நேரம்  தொடர்ந்து நடைபெற்றது.  PMG அவர்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி 9 PA COக்கள்   புதிதாக பணியில்  எதிர்வரும் 11.4.2015 அன்று இணைவதால் அன்று  அதற்கு ஈடான 9  P .A . க்களை திருப்பி அனுப்புவதாகவும்ஏற்கனவே கடந்த வாரத்தில்  அங்கயற்கண்ணி என்ற தோழியர் திருப்ப அனுப்பப்பட்டதாகவும் எதிர்வரும் 31.3.2015அன்று தோழியர் . உமா என்பவரை திரும்ப அனுப்புவதாகவும் இரண்டாம் வாரத்தில்  IP  பணியில் இருந்து விடுவிப்பு கோரி பெற்றுள்ள தோழியர்  கௌரி என்பவர் திருப்பப்படுவார் என்றும் உறுதி  அளித்தார்.   

குறைந்த பட்சம் 20 பேரையாவது திருப்ப அனுப்ப வேண்டும் என்று மாநிலச் செயலர் கேட்டுக்கொண்டார்.. அதற்கு  PMG அவர்கள்  ஒப்புக் கொள்ளவில்லை .  இதனை  நம்முடைய மாநிலச் செயலர் ஏற்கவில்லை .உடன் PMG அவர்கள் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் உடன்  மருத்துவரை  பார்க்கவேண்டும் என்றும்  கூறிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார்.  

இதன் பின்னர் மாலை சுமார் 07.00 மணியளவில்  அரசரடி HO  வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர்  PMG அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்ததோடு இந்தப் பிரச்சினையில் 20.03.2015 அன்று LABOUR COMMISSIONER  முன்னிலையில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் முழுவதுமாக DEPUTATION  உள்ள அதிகப் படியான  ஊழியர்களை திரும்பப் பெறுவோம் என்றும் இதனை ஒரு முக்கிய கோரிக்கையாக வைத்தே 26.03.2015 அன்று  மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள்  வேலை நிறுத்தத்தை   NFPE  இன் ஒன்பது சங்கங்களும் செய்ய உள்ளன என்றும்  உறுதியாகத் தெரிவித்தார் . போராட்ட  களத்தில்  உள்ள தோழர். சுந்தரமூர்த்தியை வாழ்த்தி மாநிலச் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து,  மாநிலச் சங்கத்தின் ஆதரவை  போராடும் தோழருக்கு தெரிவித்தார்..மாநிலச் சங்க போராட்ட  தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும்  நிச்சயம்  கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம் என்றும் சூளுரைத்தார். மறுநாள் 20.03.2015 காலை  தொழிலாளர் நல ஆணையருடன் ஏற்கனவே பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருந்ததால்  இரவு சுமார் 08.00மணியளவில் கோட்ட சங்க நிர்வாகிகளால்  மாநிலச் செயலர்கள் தோழர். J .R .  மற்றும்  தோழர்.  R .தனராஜ்  ஆகியோர்  வழியனுப்பப்பட்டனர். 

தொழிலாளர் நல உதவி ஆணையர் முன் அமைதிப் பேச்சு வார்த்தை

20.03.2015 காலை சுமார் 11.00 மணியளவில்  NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் 9மாநிலச் செயலர்களும் இதர பொறுப்பாளர்களும்  COC  கன்வீனர் தோழர். J .R . தலைமையில்தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் மாநில நிர்வாகத்தின் பிரதிநிதியுடன்  வேலை நிறுத்தம்  தொடர்பான கோரிக்கைகளின் மீதான பேச்சு வார்த்தையில்  கலந்து கொண்டனர். நம்முடைய வேலை நிறுத்த நோட்டீசில் கொடுத்துள்ள  பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதம் அனைத்து மாநிலச் செயலர்களாலும் வைக்கப்பட்டது.  நிர்வாகத் தரப்பில்விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்ப்பதாக CPMG அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும்  அதனால் வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப் படவேண்டும் என்றும் வேண்டினர்.

நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர் J .R . அவர்கள் மாநிலம் முழவதும் பிரச்சினைகள் பற்றி எரிவதாகவும்   இதுபோல இன்றைய தேதியில்  மதுரை கோட்டச் செயலர் மூன்றாவது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும் இது குறித்து நேற்றைய தேதியில்  மதுரை PMG இடம் பேசியும் முழுமையாக  DEPUTATIONIST  பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும்ஏற்கனவே RJCM , FOUR  MONTHLY MEETING  , BI MONTHLY MEETING களில்  எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டிருந்தும்  ஆனால் அவை அப்பட்டமாக மீறப்படுவதாகவும் தெரிவித்தார். மூன்றாவது நாள் உண்ணாவிரதம் உயிர் பிரச்சினை என்பதால்இன்றே இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிவிக்கப்படவேண்டும் என்றும்  உரக்கத் தெரிவித்தார். இது குறித்து உடனே  முடிவு செய்திட வேண்டி தாம் எழுத்து பூர்வமாக  வலியுறுத்துவதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் உறுதி அளித்தார்..  இதன் அடிப்படையில் கோப்புகள் அவசரமாக பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை சுமார் 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு  இரவே உத்திரவு அனைத்து  மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.  அதன்படி  புதிதாக பணியில் சேர்ந்த   PA COக்கள் அனைவரும்  பணி  பயிற்சி முடித்து பணியில் அமர்ந்த உடன் (APRIL மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே  CIRCLE  OFFICE  மற்றும்  நான்கு மண்டல அலுவலகங்களில்  நீண்ட காலமாக DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்  திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பதே..  இந்த செய்தி  மாநில நிர்வாகத்தில் இருந்து இரவே  நமக்கு  தெரிவிக்கப்பட்டது .  உடன்  தோழர். சுந்தரமூர்த்திக்கும் இந்த தகவல்  மாநிலச் செயலரால் தெரிவிக்கப்பட்டது. அவரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அறிவித்தார்..

20.03.2015  அன்று CPMG அவர்கள் அளித்த உத்திரவில் மிகத் தெளிவாக

“ THIS IS REGARDING  THE DEMAND FROM THE CIRCLE SECRETARY, ALL INDIA POSTAL EMPLOYEES UNION , GROUP ‘C’ (NFPE) IN HIS REPRESENTATION DT 17.3.2015  FOR IMMEDIATE REPATRIATION OF  ALL DEPUTATIONISTS WORKING IN C.O./R.O.s  TO THEIR PARENT DIVISION “.

“ IN THIS REGARD  I AM DIRECTED TO INTIMATE THAT  ALL DEPUTATIONISTS WORKING AT  C.O,/R.O.s  SHALL BE REPATRIATED IN APRIL 2015 , AFTER THE NEWLY RECRUITED  P.A.s  JOIN C.O./R.O.s  AFTER THE MANDATORY 2/3 WEEKS OF THEIR TRAINING”    என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்திரவின் வாசகங்கள்  நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியை வெளிப்படையாக அறிவிக்கின்றது.. நம் ஒன்பது சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பின் விளைவாக கிடைத்த வெற்றியும் கூட..    இந்தப் பிரச்சினை  15  ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில்  தீர்க்கப்படாமல்  நிலுவையில் இருந்த  பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள்  15 ஆண்டுகளுக்கும் மேலாக  DEPUTATION  இல் உள்ளார்கள் என்பதே  இதற்கு ஆதாரம்..

இந்த உத்திரவு மட்டுமோ அல்லது MC CAMISH FURTHER MIGRATION நிறுத்தப்பட்டு, அதன் குறைபாடுகள் களையப்பட குழு அமைக்கப்பட்டிருப்பதோ, அல்லது புதிய எழுத்தர்களின் உடனடி பணி நியமனம்  செய்திட உத்திரவிடப்பட்டது மட்டுமோ முழுமையாக பிரச்சினைகள் தீர்ந்ததாக ஆகாது. ஒட்டுமொத்தமாக  நீண்டகாலப் பிரச்சினைகள் கோரிக்கை மனுவாக நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. எழுத்து பூர்வமாக தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் நிர்வாகம் அளித்த பதிலின்படி நம் கோரிக்கை மீது  உடனடி பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்த்திட நிர்வாகம் முன் வரவேண்டும் .  இல்லையென்றால் மீண்டும் போராட்டங்கள் வேறு வடிவில் தொடரும் என்பதை நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்.

28.04.2015  பாராளுமன்றம் நோக்கிய அனைத்து 
மத்திய அரசு ஊழியர் பேரணி

JCM NATIONAL COUNCIL அமைப்பின் கீழுள்ள அஞ்சல், ரயில்வே, பாதுகாப்புத் துறை ஊழியர்  உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் ஒன்றிணைந்து  ஏழாவது ஊதியக் குழு தொடர்பான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  எதிர்வரும் 28.04.2015  அன்று புது டெல்லியில் பாராளுமன்றம் நோக்கிய பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளும் வரலாற்று சிறப்பு மிக்க பேரணியை அறிவித்துள்ளது. இதில் நமது அஞ்சல் பகுதியில் இருந்து பெருமளவில் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

ஏழாவது ஊதியக் குழு முன்பாக நமது சம்மேளனத்தின் 
சார்பில் நேரடி சாட்சியம்

கடந்த 25.03.2015 அன்று நம்முடைய அஞ்சல் பகுதி கோரிக்கைகள் குறித்து விவாதித்திட ஏழாவது ஊதியக் குழுவால்  நம்முடைய சம்மேளனம் சார்பாக தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் அனைத்து பொதுச்செயலர்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை விரிவாக எடுத்துவைத்தனர். அஞ்சல் மூன்று பகுதிக் கோரிக்கைகளில் அஞ்சல் எழுத்தருக்கு அளிக்கப்பட வேண்டிய உயர் ஊதியம், POSTMASTER GRADE, LSG, HSG பிரச்சினைகள் , PO & RMS ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR பகுதிப்  பிரச்சினைகள்  விரிவாக விவாதிக்கப்பட்டன. GDS ஊழியர்களின் கோரிக்கைகளை ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி  நம்முடைய NFPE GDS சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். பாண்டுரங்க ராவ் அவர்கள் தெளிவான வாதத்தை எடுத்து வைத்து ஏற்கனவே அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகலை மீண்டும் ஊதியக் குழுவின் தலைவரிடம் அளித்தார். நம்முடைய விவாதங்கள் ஊதியக் குழு முன்பாக நம் தலைவர்களால் மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளன .

GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவர இலாக்கா மீண்டும் பரிந்துரை

PJCA  வின்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒட்டி கடந்த 5.2.2015 அன்று  நம்முடைய தொழிற் சங்கங் களுடன்  நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட  உறுதி மொழியின்படி  GDS  ஊழியர்களை ஏழாவது ஊதியக்குழு வரம்புக்குள் கொண்டுவர  DEPARTMENT  OF  EXPENDITURE க்கு மீண்டும் அஞ்சல் இலாக்கா  பரிந்துரைத்துள்ளது. இது குறித்து  நம்முடைய அஞ்சல் JCA வுக்கு எழுத்து பூர்வமான பதிலையும் அளித்துள்ளது.

06.05.2015  முதல் PJCA வால் அறிவிக்கப்பட்டுள்ள 
காலவரையற்ற வேலை நிறுத்தம்

அஞ்சல்துறை கார்ப்பரேஷன் ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், கேடர் சீரமைப்பு காலதாமதமின்றி அமல்படுத்திட வேண்டியும் , GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழுவின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டியும், அஞ்சல் – RMS பகுதிகளில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பகுதிவாரிப் பிரச்சினைகளை தீர்த்திட வேண்டியும் 40  அம்சக் கோரிக்கைகள் அளிக்கப்பட்டு ஏற்கனவே இந்தக் கோரிக்கைகளின் மீது கடந்த ஆண்டில் PJCA அறிவிப்புக்கு இணங்க  ஐந்து கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது உங்களுக்குத் தெரியும். கடந்த 05.02.2015  அன்று இந்த கோரிக்கைகளின் மீது நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் ஏற்படாததால் மாற்றப்பட்ட 26 அம்சக் கோரிக்கையை முன்வைத்து,  மீண்டும் ஐந்து கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மீது  கடந்த 20.02.2015  அன்று கோட்ட மட்டங்களின் ஆர்ப்பாட்டம் ,27.02.2015  அன்று  மண்டல அலுவலகங்கள் முன்பாக தார்ணா போராட்டம்,  அடுத்த கட்டமாக  கடந்த  02.03.2015 அன்று CPMG அலுவலகம் முன்பாக  முழு நாள் தார்ணா  நடத்தப்பட்டது. எதிர்வரும் 29.04.2015 அன்று DAK BHAVAN முன்பாக தார்ணா போராட்டமும் இறுதியாக எதிர்வரும் 06.05.2015   முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் நூற்றுக்கு நூறு முழுமையாக, வெற்றிகரமாக நடத்திட இன்று முதலே ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

உறுப்பினர் சரிபார்ப்பும்  நமது கடமையும்

புதிய தொழிற்சங்க அங்கீகார விதிகளின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கங்களின் அங்கீகாரம் குறித்து நிர்ணயம் செய்திட  இலாக்காவினால் உறுப்பினர் சரிபார்ப்பு நடத்தப்படும்.. இது கடந்த 2010  இல் நடத்தப்பட்டது. தற்போது 2015 மார்ச் மாதம் உறுப்பினர் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . நமது NFPE சம்மேளனத்தின் கீழுள்ள அனைத்து இலாக்கா ஊழியர் அமைப்புகளின் சங்கங்களும் தனித்தனியே இதற்கான விண்ணப்பங்களை  இலாக்காவுக்கு அளித்துள்ளன. மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் மீது உறுப்பினர் படிவம் பெறுவதற்கான காலக்கெடுவுடன் புதிய விண்ணப்ப படிவங்கள் இலாக்காவினால் இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். அப்போது நம்முடைய தோழர்கள் அனைவரும் பம்பரமாக செயல்பட்டு ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள், புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஊழியர்கள், இதுவரை எந்த சங்கத்திலும் இணையாமல் தனியே உள்ள ஊழியர்கள், மாற்று சங்கங்களில் இருந்து நம் சங்கத்தில் இணைய விரும்பும் உறுப்பினர்கள் என்று அனைவரிடமும் புதிய உறுப்பினர் படிவம் பெற்று நம்முடைய சங்கத்தை எப்போதையும் விட மிக அதிக வலுவாக ஆக்கிட  முழு முயற்சிகளையும் மேற்கொண்டிட மாநிலச் சங்கம் வேண்டுகிறது. புதிய படிவம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படலாம் என்பதால், வழக்கம் போல ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கையை, பழைய உறுப்பினர் படிவம் கொண்டு மேற்கொள்ள வேண்டுகிறோம். இதனை 30.04.2015  க்குள் வழக்கம்போல கோட்டக் கண்காணிப்பாளருக்கு உரிய பட்டியலுடன் அளித்திட வேண்டுகிறோம்.

லக்னோவில் நடைபெற உள்ள அஞ்சல் மூன்றின் 
30 ஆவது அகில இந்திய மாநாடு

உத்திரபிரதேசம் லக்னோ நகரில் எதிர்வரும் ஜூன் 4,5,6 மற்றும் ஆம் தேதிகளில் நம்முடைய சங்கத்தின் 30 ஆவது அகில இந்திய மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. முக்கியமான தொழிற்சங்கத் தலைவர்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் , உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் கருத்தரங்கு மற்றும் பொது அரங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் இலாக்கா மற்றும் மத்திய அரசின் முன்பாக நாம் வைக்க வேண்டிய கோரிக்கைகள்  மற்றும் நாம் நடத்திட வேண்டிய போராட்டங்கள் குறித்து நாடு முழுவதிலிருந்தும்  நூற்றுக்கணக்கில் சார்பாளர்கள் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளார்கள். அதன் மீது தீர்மானங்கள் எடுக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவே தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் சார்பாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு  சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

நம்முடைய அகில இந்திய மாநாடு எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது நம்முடைய மாநில மாநாடும் இந்த ஆண்டில் நடத்தப்படவேண்டும். எனவே இந்த மாநாடுகளில் சார்பாளர்களாக கலந்துகொள்ள வேண்டும் என்றால், கடந்த 01.04.2013  லிருந்து   31.03.2015  வரையிலான காலத்திற்கு  தங்கள் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில்  மாநிலச் சங்கம்  மற்றும் அகில இந்திய சங்கத்திற்கான பகுதிப் பணத்தை (QUOTA) எதிர்வரும் 30.04.2015க்குள் செலுத்திட வேண்டும். அதன் பிறகு செலுத்தப்படும் QUOTA நடப்புக் காலத்திற்கு வரவு வைக்கப்படமுடியாது. காலதாமதமாக பகுதிப் பணம் செலுத்தப்பட்டால் உங்கள் கோட்ட/கிளைக்கான உரிய சார்பாளர் அனுமதி மறுக்கப்பட நம்முடைய  சங்க விதி  அறிவுறுத்துவதால், உடனடியாக செயல்பட்டு  நிலுவையில் உள்ள தங்களது பகுதிப் பணத்தை 30.04.2015 க்குள் கிடைக்குமாறு செலுத்திட அன்புடன் வேண்டுகிறோம். இதுபோல நமது சம்மேளனத்திற்கும் உரிய பகுதிப்  பணத்தை உடன் அனுப்பிட வேண்டுகிறோம். இது குறித்த மேல் விபரங்கள் நம்முடைய  மாநிலச் சங்க வலைத்தளத்தில் விரிவாக வெளியிடப்படும். அடுத்த அறிக்கையில் மீண்டும் சந்திப்போம்.

தோழமை வாழ்த்துக்களுடன்

J. இராமமூர்த்தி , மாநிலச் செயலர் .