Wednesday, March 9, 2016

மகளிர் தின கவிதைகள்

08.03.2016 மகளிர் தின விழா கவிதை போட்டியில் 

முதல்  பரிசு பெற்ற கவிதை 

கவியாக்கம் : தோழியர் P .மோகனாம்பாள் , POSTWOMAN , திருப்பூர் H .O .

           பெண்  - சமூக பண்பாட்டின் பாசறை

பெண்ணின் பெருமையை விளக்கும்
மகளிர் தினமாம் மார்ச் எட்டு
யாரிந்த மகளிர் ? யார்? . . . இந்த மகளிர்?
அன்புப் பிரவாகம் ; அழகு பிரளயம்;
பண்புப் பெட்டகம் ; பாசப்பெருங்கடல் ;
அறிவுச்சுடரொளி; அகத்தில் பேரொளி;
இனிய சங்கீதம் ; இயற்கையின் இலக்கியம் ;
அவள்  சக்தி ! . . .   மகா சக்தி !!
தமிழில் அவள் பெயர் பெண்மணி !
தரணிக்கு அவள்தான் கண்மணி !
ஏற்ற புதல்வனைச்  சான்றோனாக்கிட
இவள் படும்பாடு தியாகமல்ல ... யாகம்
பிஞ்சு மழலையைக்  கொஞ்சுமவள்  அழகு !
பேச்சு கற்பிக்கும் அபிநயம் அழகு!
அம்புலியைக்  காட்டி அமுதூட்டல் அழகு !
நல்லன ஆவதும் ...  அல்லன  அழிவதும் ...
தெள்ளென விளங்கிடும் அவளால்தானே !
நீதானே இந்த சமூக பண்பாட்டின் பாசறை !
பெண்ணே! உன் உயரத்திற்கு ஒரு
தொடக்கம்தான் கல்பனா சாவ்லா . . .
உன் பரந்த உள்ளத்திற்கு ஒரு
பாசம்தான் அன்னை தெரசா ...
உன் அரிய கண்டுபிடிப்பிற்கு ஒரு
தொடக்கம்தான் மேரி கியூரி . . .
சாதனை படைத்தவர்களும் !
சரித்திரத்தில் இடம் பெற்றவர்களும் !
மறைந்து விட்டார்கள் என
மனம் கலங்கி விடாதே ! இதோ !
இளைய சமுதாயம் வந்து
கொண்டே இருக்கிறது உன் பின்னே !
மானுடம் சிறந்திட மகளிரைப்  போற்றுவோம் !
மாநிலம் செழித்திட மகளிரை வணங்குவோம் !

========================================================================
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை 
=======================================================================

கவியாக்கம் :தோழியர் M .அஜிபுன்னிஷா , O .A .,கோட்ட  அலுவலகம்,திருப்பூர்.

சிற்பியாகும்  சித்திரங்கள்

பெண்ணே !
நீ ஆடை உடுத்திய
அலங்கார பொம்மையல்ல !
சோடை போவதற்கு !

பெண்மையை வரமென்றவர்களே
நம்மை வரதட்சணைக்கு
வரட்டியாக்கியது  போதும் !

அடகு வைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று !
அள்ளி வீசிய உன் கனவுகளை கண்டெடு !

உன் வழிகள் எங்கும்
தூண்டில்கள் இருக்கலாம் !
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம் !
தண்ணீராய்  மாறு !
தங்க மீனாய்தான்  இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !

வாழ்க்கை உனக்கு
சிற்பங்களையும் பரிசளிக்கும் !
தோல்விகளையும் பரிசளிக்கும் !
தோல்விகள் மட்டுமே
உனக்கு உளிகள் தரும் சிற்பம் செய்ய !

உனது ஆறாம் அறிவு
ஆராய்வதற்கு !
அழுது அழிவதற்கல்ல !

அதிகாலை பனிக்காற்று
முதல்
அந்திநேர அரட்டைவரை
ரசிக்க கற்றுக்கொள் !

சித்திரங்களாய்  சுவரில்
இருந்து பயனில்லை !
உன் சிந்தனையைக்  கொண்டு
சிற்பியாய் மாறு

No comments :

Post a Comment